Saturday, November 2, 2019

குன்றக்குடிப் பதிகம்





குன்றக்குடிப் பதிகம்

பூரணி பராசக்தி தேவியம் மைதரும் 
    புதல்வனே பொதிகை மலைவாழ் 
புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உரைத்திடும் 
   புலவனே புலவர் கோனே 
காரணி கரைகண்ட ருக்குவுப தேசமது 
   கருதுமெய் ஞான குருவே 
கண்களீ ராறுடைய கர்த்தனே சுத்தனே 
   கரியவண் டார் கடப்பம் 
தாரணியு மார்பனே தமிழ்கொண்டு நக்கீரர் 
   தன்துயர் தவிர்த்தருள் செய் 
சக்திவடி வேல்கரத் தணியுமுரு கையனே 
    தணையர்தந் தருள் புரிகுவாய் 
கோரமிகு சூரசங் காரசிங் காரனே 
    குறவள்ளி மண வாளனே  
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால 
   குன்றை மாநகர் வேலனே 


கந்தா சிலம்பா கரங்களீ ராறுடைய
   காங்கேயா கார்த்தி கேயா 
கருணைதரு முருகா குகாசண்மு காவிசா 
   காவேல ணிந்த குழகா 
மந்தா கினிக்கினிய மைந்தா மயூரகிரி 
   வாசா வுயர்ந்த தோகை 
மயிலேறு சேவகா அயில்போலு இருநயன 
   மாதுதெய் வானை கணவா 
செந்தா மரைத்தெரிவை கேள்வனய னுந்துதிசெய் 
   திவ்யசர ணார விந்தா 
சீலாமெய் யன்பரனு கூலா வெனக்குநற் 
   சிறுவர்தந் தருள் புரிகுவாய் 
கொந்தார் கடப்பமலர் மாலையணி மார்பனே 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே

அமரா வதித்தலைவன் ஆனமுரு கையனே 
   ஆதி பன்னிரு கையனே 
ஆறுமுகனே உமா தேவிமக னேயர 
   வணைச்செல் வனார் மருகனே
சமரா டியசூரர் பத்மமுத லசுரரைச் 
   சம்கார மேசெய்த வா 
தாரணி வணங்குபரி பூரணா காரணா 
   சரவண பவா கடம்பா 
எமராஜ னுக்குமஞ் சாமலெதிர் வார்த்தைகள் 
   இயம்பவா யது தந்திடும் 
எந்தையே சந்ததிகள் தந்துனது தாளினை
   ஏவல்கொண் டருள் புரிகுவாய் 
குமரா குறிஞ்சிக்கும் இறைவனே குறவனே 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


பாகனைய கிளிமொழித் தெய்வகுஞ் சரிமாது 
   பாகனே வாகனே பொன் 
பங்கயத் தயனைமுன் சிறைவைத்த குமரகுரு 
   பரனே பரஞ் சோதியே 
நாகரிக மானநவ வீரர்க்கு முன்னவா 
   நாக முகவன் பின்னவா 
நலமான அருணகிரி யானையாட் கொண்டகுரு 
   நாதனே வேத முதலே 
மாகனக வரைமுதற் குன்றுதோ ராடல்புரி 
   மயில்வா கனக் கடவுளே 
வரதனே குகனே சண்முகனே எனக்குநல் 
   மைந்தர்தந் தருள் புரிகுவாய் 
கோகனக மாதுமண வாளன்மகிழ் மருகனே 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


தஞ்சமென அன்பினுடன் வந்தடையு மெய்யன்பர் 
   தமையா தரித்தருள் செய் 
சண்முகா சதகோடி சூர்யப்ர காசனே 
   சந்த்ர வதனச் சுந்தரா 
கஞ்சமலர் வாழுமுக மொருநாலும் மிருநாலும் 
   கண்ணுமுள வேத னுக்குங் 
காமமிகு காமன் தனக்குமுயர் மைத்துனா 
   கலச முனிவன் கும்பிடுஞ் 
செஞ்சரண பங்கேரு கர்த்தனே சுத்தனே 
   செல்வச் சிகண்டி மலைவாழ் 
தேவாதி தேவனே என்றனுக் கறிவுடைய 
   சிறுவர்தந் தருள் புரிகுவாய்
குஞ்சர முகற்கிணைய பச்சைமயில் வாகனா 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


விண்டலத் தினின்மேவு முப்பத்து முக்கோடி 
   விண்ணவரும் முனி வோர்களும் 
வெள்ளைவா ரணமீதில் ஏறுபுலி சாயுதனும் 
   விஞ்சையரும் அள கேசனும் 
மண்டலத் தவரும்நீள் பாதலத் தவருமுடி 
   மன்னரும் விளங்க நன்னாள் மறையுமறை யோனுமம் புலியும் ஆதித்தனொடு 
   மதனனும் பேய் முலைப்பால் 
உண்டவச் சுதனுமலர் தூவித்தினம் பணியும் 
   உபய சரணார விந்தா 
உன்னையே நம்பினேன் என்றனுக் குச்சிறுவர் 
   உதவியே அருள் புரிகுவாய் 
கொண்டலொத் திடுகருங் குழலுநூல் இடையுமுள 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே.


முடியாறு டைக்குமர குருபரா சதுர்வேத 
   முதல்வனே கருணா நிதி 
மும்மதம் பொழிவேழ முகவன் தனக்கிளைய 
   முருகேச னேபரவை சூள் 
படியார் வணங்குபொற் பாதார விந்தனே 
   படஅரவின் மேல் அடிக்கும் 
பச்சைமால் மருகனே நெக்குநெக் குருகியே 
   பக்தியுட னேதுதி செயும் 
அடியார் உளத்தினில் குடிகொண்டி ருக்குமென 
   அப்பனே ஒப்பி லாத 
ஐயனே துய்யனே அறிவுடையசிறுவர்தந்
   தருள் புரிகுவாய் சேவலம் 
கொடியா கடப்பமலர் மாலையணி மார்பனே 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


சுந்தர நிறைந்திலகு கந்தவே ளேபால 
   சுப்ர மண்யக் கடவுளே 
துரியவடிவே அரிய பெரியபொரு ளேபரஞ் 
   சோதியே கோதி லாத 
மந்திர கிரிக்குநிகர் பன்னிரு புயத்தனே 
   மாயூர கிரி வாசனே 
மாசிலா மணியே மிகு கருணைவெள்ளமே 
   வளர்சேவ லங் கொடியனே 
அந்தரத் துறையா யிறங்குமால் மருகனே 
   அகிலமுழு துந் துதிக்கும் 
ஆதியே சோதியே அறிவுடைய சிறுவர்தந் 
   தருள் புரிகுவாய் மஞ்செனுங் 
கொந்தளக மும்பவள வாயும்வேல் விழியுமுள 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


வம்பனா கியசூர பத்மனொடு சிங்கமுகன் 
   வலியபுய பானு கோபன் 
வஞ்சக் ரவுஞ்சன்முத லாவசுரர் தமையெலாம் 
   வடிவே லினால் மடித்து 
உம்பரா னவர்கள்சிறை மீட்டும் இந்திரனுக்கு 
   உயர்ந்தமணி முடி தரித்து 
ஓதரிய வானாடு குடியேற்றி வைத்தஜய 
   உல்லாச மிகு வாசனே 
செம்பவள வாயனே அன்பர்கள் சகாயனே 
   தேடுதற் கரிய பொருளே 
தேவாதி தேவனே யென்றனுக் கறிவுடைய 
   சிறுவர்தந் தருள் புரிகுவாய் 
கும்பமுனி வர்க்கருள் புரிந்த குமரேசனே
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே


திருவே உயர்ந்நவ ரசமிகுந் தேனே  
   தெவிட்டாத தெள் ளமுதமே 
தித்திக்கும் மதுரமுக் கனியே கரும்பே 
   சிறந்த முத்தே ரத்னமே 
அருவே விளங்கிவள அரியவுரு வேநல்ல 
   அகண்ட வடிவே அப்பனே 
ஆதிநடு முடிவாகி எங்கும்நிறை சோதியே 
   அன்பர்  வேண்டிய தளிக்கும் 
தருவே சிகண்டிமலை தனில் வீற்றிருக்கின்ற 
   சாமியே முத்தி வித்தே 
சண்முகா சரவண பவாகடம் பாசிறுவர் 
   தந் தருளுவாய் சிவாய 
குருவே மயூரவா கனஅகில நாயகா 
   குறவள்ளி மண வாளனே 
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
   குன்றை மாநகர் வேலனே