ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் ---தமிழில்
வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 1
எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 2
போர்புரிந்து மதுகைடைத் தமையழித்தான் உளத்துணியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் [2] 3
திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இங்குக்கலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் 4
தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவிக்க
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய் 5
ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த யாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய் 6
நன் கமுகு தென்னைகளில் பாளை மனம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பணித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீர பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 7
நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் தீர்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 8
எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்தும் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய் 9
வெண்கமல ஒன்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய் 10
கனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவலைகள் ஒலியெழுப்ப
மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய் 11
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளை காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெறிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய் 12
வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலக மனைத்தினொடும் இழைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 13
மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோலேறி திருநீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் 14
திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் 15
அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளராய் வேங்கடவா எழுதருள்வாய் 16
திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாத நடை முதலாய
திருநடைகள் சிறப்புணர்ந்து திருத்தமுற கற்பதற்கு
கருட சிம்ம நா தருளான் வேங்கடவா எழுதருள்வாய் 17
சூரியனார் சந்திரனார் செவ்வாய் புதன் வியாழ
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுதருள்வாய் 18
நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகலைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய் 19
எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய் 20
மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை புனைக் கடலே
தின்புயத்துக் கருடனுடன் நாதனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களின் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோ தனிப் புகழே வேங்கடவா எழுந்தருள்வாய் 21
பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைக்குண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போலருல்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய் 22
திருமகள் தன் திருயணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய் 23
மச்சநாதா கூர்மநாதா வராக நாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியணே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் 24
ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய் 25
அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புல்லினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்கலங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய் 26
நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்கலமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ் கொடிகள் ஏந்தினர்காண்
தே மரு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய் 27
திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்துட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திரு தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய் 28
விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் [2] 29
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்
மலர் மேல் உறை மாதவி மார்பகத்தே
குலவும் ஒரு குங்கும நீலவனே
மலர் தாமரை கண்ணுடை நாயகனே
நலமே பெற காத்தருள் வேங்கடவா [2] 1
மறை நான்முக ஐமுக ஆறுமுகப்
பெரியோர்களின் சீர்மிகு தலைமணியே
சரணாகதி யென்பவர்க்க ன்புறவே
பெரும்பேர் நிதி காத்தருள் வேங்கடவா 2
பொது எல்லைகள் தாண்டிய பாவமதை
நிதமே புரிந்தின்னமும் புரிவதிலே
அதிவேகமே கொண்டுள எங்களையே
இதமாகவே காத்தருள் வேங்கடவா 3
அருள் நீ வதில் ஆர்வமாய் நின்னடியார்
வரம் வேண்டியதை விட ஈபவனே
பெரும் நான்மறை ஓதிடும் ஓர் பொருளே
திருமார்பனே காத்தருள் வேங்கடவா 4
நயம் சேர் இசைக்குங் குழல் இன்னமுதால்
வயமாயிடு கோபியர் சூழ்பவனே
மயல் காமனின் பேரெழில் கோடி பெரும்
முயல்வே யெமைக் காத்தருள் வேங்கடவா 5
பலர் போற்றிடும் பேரருள் மூர்த்தியனே
நலமே புனர் சீதையின் நாயகனே
தளிர் மேனியனே ஒரு வில்லவனே
ஒளியே எமைக் காத்தருள் வேங்கடவா 6
இருதாமரை பூத்திடும் சந்திரனாய்
திரு சீதையின் கேள்வனை இன்றவனே
இருள் ராவணனுக்கொரு சூரியனே
சரணா இனும் காத்தருள் வேங்கடவா 7
நெறியாரடையின் உரை எளியவனே
திருத்தாயினை தேவியர் பெற்றவனே
பிறர் யாருடை தாளையும் வணங்கிலமே
பெரியோர் ெயமைக் காத்தருள் வேங்கடவா 8
திருவேங்கடேசா நாதனே நாதன் நீ
ஒரு வேங்கடேசா உன்னையே எண்ணினும்
பெருவேங்கடேசா நின்னையே நின்னையே
அருள் வேங்கடேசா அருள் வேங்கடவா [2] 9
நெடுநாள் வரை யாம் உனை தொழுவதற்கே
முடியாமையால் இன்றுனைத் தொழப் புரிந்தோம்
அடி போற்றிடும் நித்தியர்க்கருள்வது போல்
அடியே எமையும் காத்தருள் வேங்கடவா 10
அறியாமையால் புரி தீவினை புரியாதுளத் தர நீக்கிடு
பொறுத்தே அருள் பொறுத்தே அருள் பெருமாமணி
வேங்கடவா [2] 11
ஸ்ரீ வேங்கடேச ப்ரபத்தி
வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே
பூங்கமலத் தனிகரத்தாள் பொறுமை வளர் பூதேவி
ஓங்கிய சீர் குணம் ஒளிரும் உயர்தனிப்பேர் தவத்தாயே
வேங்கடத்தான் திருத்தேவி நின் பாதம் சரண் புகுந்தோம் [2] 1
கருணையெனும் திருக்கடலே காத்தளிக்கப் படைத்தவனே
பெருந் தாயைப்பிரிந்தறியாப் பெரியோனே வல்லவனே
ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர்களையும்
திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம் [2] 2
ஒன்றுடனொன்று ஒத்திணைந்த ஒப்புயர்வில் அடியவர்நான்
அன்று முதல் இன்று வரை அருளமுதாய்த் தொழத் தகுந்த
நன்மணங்கள் வாய் அவிழ்ந்த நறுமலர்கள் மிக நிறைந்த
நின்னடிகள் தஞ்சமென வேங்கடவா சரண் புகுந்தோம் [2] 3
அன்றலர்ந்த மிகச் சிவந்த அருங்குலத்தில் பறிபடாது
நின்றிருக்கும் தாமரை நின் திருவடிக்கு நிகராகும்
என்றுரைக்கும் உறையும் ஒரு மிக முரட்டு கல்லுரையாய்
தென்படுமாறு உளதடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 4
கொடி அமிர்த திருகலசம் கற்பதரு தாமரைப் பூ
நெடிய குடை சங்கு சக்கரம் வஜ்ரத்தோடு அங்குசமாம்
அடையாள ரேகைகள் தான் படர்ந்தமைந்த நினது திரு
அடியிணைகள் பற்றி நின்றே வேங்கடவா சரண் புகுந்தோம் 5
உள்ளங்கால் பேரொளிக்கு பத்மராக ரத்தினங்கள்
ஒல்லிய சீர் புரவடி போல் இந்த்ர நீல ரத்தினங்கள்
வெள்ளிய நல் நகங்களுக்கு வெண்மதிகள் தோற்றோட
உள்ளிவந்தோம் நின்னடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 6
வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டரிய திருவடியை
பூக்கமலத் திருத் தேவி தளிர்கரத்தால் ஆசையுடன்
ஏற்புற்றே வருடிடவும் வாட்டமுறும் மெல்லடியை
நோக்க அருள் பொழியடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 7
மன மகிழ்ந்து திருமகளும் மண்மகளும் நப்பினையும்
நினைவிழந்து துளிர் தளிர்க்கும் தன் ரோஜா திருக்கரத்தால்
தினம்வருட அவர் கரத்து திருச் சிவப்பு தொற்றியதோ
எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 8
நினை வணங்கு சிவ பெருமார் நெடுமடியில் நவரத்ன
மணிகளிடை விதை முளைபோல் கதிர் ஒளிகள் கிளர்ந்தெழுமே
கணங்களென கற்பூர ஆர்த்தியென மணி ஒளியைத்
தினமேற்கும் நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 9
எவ்வடிகள் வேதமெலாம் மிகப் புகழும் திருவடிகள்
எவ்வடிகள் ஞானியர்க்கு தேன் பெருக்கும் செவ்வடிகள்
எவ்வடிகள் புகல் என நின் மரக்கரந்தான் கஷ்டடிகள்
அவ்வடியை அடைந்துய்ய வேங்கடவா சரண் புகுந்தோம் 10
தேர் தட்டில் பார்த்தனுக்குச் சரண் புகுவாய் என உரைத்து
நேர்த்தி மிகக் காட்டிய எத்திருவடியோ அவ்வடியே
கீர்த்திமிகு வேங்கடத்தில் வலக் கரந்தான் காட்டடிகாள்
பார்த்தனைப் போல் பயன் பெறவே வேங்கடவா சரண் புகுந்தோம் 11
உனை நினைத்தே உன்னிடத்தே ஆள்பவர் தம் மனத்திடத்தும்
தினமலர் தம் போற்றுமறை முடியிடத்தும் வேங்கடத்தும்
எனது பெரும் தலையிடத்தும் காளிங்கன் தலையிடத்தும்
மனத்திடத்தும் புகுமடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 12
வாட்டமின்றி தரை நிறைய மனமலர்கள் சூழ்ந்தமய
நேட்டிய பல சிகரத்து வேங்கடத்தின் அணியாகி
நாட்டமுறு மனமீர்த்து நல்லடியார்க்கின்புணர்ந்து
வீட்டின்பம் தருமடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 13
சரண் புகுவார் முதன் முதலில் அறிந்தறியக் கற்றனவாய்
ஒரு சிறுபை குழவிக்கு தாயருள் போல் அமைந்தனவாய்
பெரும் அமுதாய் வேறெதெற்கும் ஒப்புமையை ஒழித்தணவாய்
இருந்திருள் நின் அடிகளினை வேங்கடவா சரண் புகுந்தோம் 14
தூய்மனத்துப் பெருந்தகையோர் தொழுதேத்தும்லர்தாளாய்
வாய்த்துளையிற் பிறவியெனும் பெருங்கடலைத் தாண்ட வைப்போர்
தாயனைய மாமுனிவர் எமக்குணர்த்தி சரண்புகுவீர்
போய் நின்ற நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம் 15
சரண் புகு நின் அடியவர்தம் குறை மறைத்து நீயருளப்
பெருந் துணைகள் பல புரிந்து குற்றேவல் கொண்டருளும்
திருத்தாய்வாள் அருள் மார்பா உமக்கே யாம் ஆட்படுவோம்
திருவடிக்கே பணிந்துய்வோம் வேங்கடவா சரண் புகுந்தோம் [2] 16
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்
திருக்கேள்வா மங்களங்கள் பொழிபவனே பொலிபவனே
பெரு நெறியே சீனிவாசா வேங்கடவா மங்களங்கள் [2] 1
பெருந்தவத்தாய் மைய்யலுறப் பேருலகைப் புரந்தருளும்
திருப்புருவ அருள் கண்ணா வேங்கடவா மங்களங்கள் 2
வேங்கடத்து மலைப்பொலி சேர் விழையணியாம் திருத்தாளாய்
ஓங்கிய சீர் மங்களத்தாய் வேங்கடவா மங்களங்கள் 3
எல்லோர்க்கும் எப்பொழுதும் எழில் மயக்கும் பணித்தருளும்
நல்லழகு பெருமானே வேங்கடவா மங்களங்கள் 4
அறிவறியாய் குற்றமில்லாய் மாற்றமில்லாய் நிறைமகிழ்வே
எழில் ஞான உயிர் முதலே வேங்கடவா மங்களங்கள் 5
எல்லாமும் அறிந்தவனே படைத்தவனே ஆள்பவனே
நல்குணனே எளிமையனே வேங்கடவா மங்களங்கள் 6
பரப்ரம்மா பரமாத்மா விழைந்தனர்கள் பெற அருளும்
பரம் பொருளே பரதத்வா வேங்கடவா மங்களங்கள் 7
தவமேனி தனியழகைச் சலிப்பின்றி தியானிப்போர்
தெவிட்டாது தூய்த்துணரும் வேங்கடவா மங்களங்கள் 8
சரண் புகுவார் மோட்சநிதி தனதடியை எனது வலது
கரத்தானே காட்டியருள் வேங்கடவா மங்களங்கள் 9
பெருங் கருணைப் பேரமுதப் பெயராற்றின் அலைகளெனும்
திருவிழியால் துயர் நீக்கும் வேங்கடவா மங்களங்கள் 10
திருமாலை பட்டாடை திரு அணிகள் பெருமை பெற
வரு பெறுவன் துயர் தணிக்கும் வேங்கடவா மங்களங்கள் 11
அருள் பொழிய வைகுந்தம் தவிர்ந்தருளி கோனேறி
திருக் கரையில் புணர் தாடும் வேங்கடவா மங்களங்கள் [2] 12
மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக்
கணம் புரந்து களித்தருளும் வேங்கடவா மங்களங்கள் 13
ஈங்கெங்கள் குருமுதலோர் இயம்பியவள் மங்களத்தாய்
ஓங்கி உயர் வேங்கடவா உனக்கென்றும் மங்களங்கள் 14
*****************************