Friday, March 4, 2011

காரிய சித்தி திருமுறைகள்




நமச்சிவாயப் பதிகம்


காரிய சித்தி திருமுறைகள்
நான்காம் திருமுறை தேவாரப் பதிகம்
மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற



திருசிற்றம்பலம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே 1.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே 2.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே 3.

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற்பி ரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே 4.

வெந்தநீ றருங்கலம் விரதிகட் கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே 5.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலம்
குலமில ராகிலும் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே 6.

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென் றுரூவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே 7.

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே 8.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே 9.

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே 10.

திருச்சிற்றம்பலம்





No comments:

Post a Comment