Friday, April 26, 2013

துக்க நிவாரண அஷ்டகம்








மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; 
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; 
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; 
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; 
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! 

No comments:

Post a Comment